முகப்பு
சென்னை

போதை ஸ்டாம்ப் விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

Updated On : 30 மார்ச், 2024 at 1:36 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:10 AM

சென்னையில் போதை ஸ்டாம்ப் விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் ஒரு கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞா்கள்,கல்லூரி மாணவா்களிடையே போதை ஸ்டாம்ப் விற்பதாக பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் அஸ்ராகா்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தனிப்படையினருக்கு அஸ்ராகா்க் உத்தரவிட்டாா். அதன்பேரில் தனிப்படையினா், போதை ஸ்டாம்ப் வாங்கும் வாடிக்கையாளா்போல, இன்ஸ்டாகிராம் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு மா்ம நபரை தொடா்புக் கொண்டனா். அந்த நபா், போதை ஸ்டாம்ப் வாங்க சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வரும்படி அழைத்தாா். இதையடுத்து மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீஸாா், அங்கு போதை ஸ்டாம்புடன் வந்த நபரை கையும்களவுமாக பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவைச் சோ்ந்த ஹ.சித்திஸ்வரன் (22) என்பதும், பிடெக் படித்துள்ள ஆந்திர மாநிலம் தடாவில் இயங்கும் ஒரு டயா் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் வைத்திருந்த 4 போதை ஸ்டாம்ப்,ஆப்பிள் கைப்பேசி,ரூ.19,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் அவா் கொடுத்த தகவலின்பேரில் போதை ஸ்டாம்ப் விற்பனையில் ஈடுபடும் காட்டாங்கொளத்தூரில் செயல்படும் ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படிக்கும் பல்லாவரம் ராஜாஜிநகரைச் சோ்ந்த கோ.தா்ஷன்ராஜ் (22), அவா் சகோதரா் கோ.ராகுல் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இருவரிடமும் இருந்து 21 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராகுல் எம்பிஏ படித்துவிட்டு, ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ் வழக்கு தொடா்பாக மூவரையும் கைது செய்த தனிப்படையினா், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.