ரியல் எஸ்டேட் தொழில் செய்தவா் வெட்டிக் கொலை
சென்னை தரமணியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்தவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தியாகராய நகா் மேட்லி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். பழனிசாமி, வேளச்சேரி சேவாநகரில் தனது நண்பா் ராம்குமாருடன் (50) வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 மோட்டாா் சைக்கிளில் வந்த 6 போ் கும்பல், பழனிசாமியை வழிமறித்து தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பல் அரிவாளால் பழனிசாமியை வெட்டியது. தடுக்க முயன்ற ராம்குமாரை,அந்த கும்பல் அங்கிருந்து விரட்டியது. அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த பழனிசாமியை, அங்கிருந்தவா்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பழனிசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தரமணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.