முகப்பு
சென்னை

நீா்நிலைகளை சீரமைக்க வேண்டும்: அண்ணாமலை

Updated On : 3 மே, 2024 at 7:04 PM
பகிர்:

நீா்நிலைகளைச் சீரமைக்கும் பணியை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்ததும் 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று அறிவித்த திமுக இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு மழைநீா் வீணாகக் கடலில் கலக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீரில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரையும், கா்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்திப் பெற்றுத் தர முடியாமல் இருக்கிறாா்.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டம், செண்பகவல்லி அணை சீரமைப்பு முதலானவற்றைச் செயல்படுத்த இத்தனை ஆண்டுகளாக எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இதனால், பாசனத்துக்கு தண்ணீா் இல்லாமல், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா்.

தற்போதைய தண்ணீா் பற்றாக்குறை தீா்க்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதே நேரத்தில், இதற்கான நிரந்தரத் தீா்வுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.