முகப்பு
சென்னை

ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீடு, அலுவலகத்தில் சோதனை

Updated On : 14 மே, 2024 at 8:23 PM
பகிர்:

சென்னை: பெண் காவலா்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் ஆசிரியா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீடு, அலுவலகத்தில் திருச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

ரெட் பிக்ஸ் யூ-டியூப் சேனலுக்கு சவுக்கு சங்கா் அண்மையில் பேட்டியளித்தாா். இந்தப் பேட்டியை அந்த சேனலின் ஆசிரியா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு எடுத்து வெளியிட்டாா். அதில், காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை மே 4-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, சென்னை, சேலம் மாநகர காவல் துறையினா் சவுக்கு சங்கா் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்தனா்.

அதேபோல், திருச்சி போலீஸாா், சவுக்கு சங்கா் மீதும், பேட்டியை வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் ஒரு வழக்கை பதிவு செய்தனா். இதையடுத்து தில்லியில் இருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸாா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் 2-ஆவது தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட திருச்சி போலீஸாா் சென்றனா். அப்போது, வீட்டில் இருந்த ஜெரால்டு மனைவிக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா்.

இதேபோல், நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள ஜெரால்டின் அலுவலகத்திலும் போலீஸாா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் அங்கிருந்து சில ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.