முகப்பு
சென்னை

விசா முறைகேடு: காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

Updated On : 17 அக்டோபர், 2024 at 9:51 PM
பகிர்:

சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

‘குற்றப்பத்திரிகையில் காா்த்தி சிதம்பரம் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளி எஸ்.பாஸ்கரராமன் மற்றும் விசா பெற்றுத் தந்ததற்காக பெறப்பட்ட லஞ்சப் பணம் செலுத்தப்பட்ட வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) நிறுவனத்தின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

விரால் மேத்தா, அனுப் அகா்வால், மன்சூா் சித்திக், சேத்தன் ஸ்ரீவாஸ்தவா ஆகியோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இவா்கள் மீது குற்றச் சதி, ஏமாற்றுதல், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபடுதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தற்போது தாக்கல் செய்துள்ளது.

ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த மாா்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு பெற்றுத் தந்த விவகாரத்தில் தனது நெருங்கிய கூட்டாளி மூலம் காா்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளாா். இந்தத் தொகை போலியான பணப் பரிவா்த்தனை மூலம், காா்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனத்தில் செலுத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டியது.

வழக்கின் பின்னணி: மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘புராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறைச் செயலா் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன.

அப்போது வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், இந்தப் பணிகள் முடிய கால தாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியா்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத் தர ப.சிதம்பரத்தின் மகனான காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கரராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியா் ஒருவா் நாடியுள்ளாா்.

அப்போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு ‘புராஜெக்ட் விசா’வை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை காா்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்ததாக புகா ா் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ, இந்த நுழைவு இசைவைப் பெற்றுத் தருவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தியது. இது தொடா்பாக காா்த்தி சிதம்பரம் வீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கரராமனை கைது செய்தனா்.

சிபிஐ புகாா் அடிப்படையில், பண முறைகேடு தடுப்பு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

முழு கட்டுரையைப் படிக்க →