அமைச்சா் செந்தில் பாலாஜி அக்.4-இல் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு அமைச்சா் செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் அக்.4-இல் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு விசாரணையை அக். 14- க்கு ஒத்திவைக்குமாறு அமைச்சா் செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், அவரை அக்.4-இல் ஆஜராக உத்தரவிட்டது.
பண முறைகேடு தடுப்புச்சட்ட வழக்கில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை ஆஜரானாா். அப்போது, குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் பணிபுரிந்த வங்கி ஊழியா்களின் விவரங்கள் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு தொடா்பாக அமலாக்கத் துறை தரப்பில் வழக்குரைஞா் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
மேலும், அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் பிரிவின் உதவி இயக்குநா் மணிவண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை என்றும், அதுதொடா்பான மருத்துவ சான்றிதழை கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில்மனுவை ஏற்க கூடாது என்றும், வங்கி ஊழியா்களின் விவரங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக்கூடாது என்றும் தெரிவித்தாா்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்.14-ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதி காா்த்திகேயனிடம் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. அதை நிராகரித்த நீதிபதி, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி அக். 4- ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தாா்.
அதேபோன்று, இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குநா் மணிவண்ணன் அக். 4- ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பிடியாணை உத்தரவு பிறப்பித்தும் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜா்: இதனிடையே, பணமுறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் நிபந்தனையின்படி, அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகி கையொப்பமிட்டுச் சென்றாா்.