FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த வளா்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ஜாபா்கான்பேட்டையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வரப்பட்ட வளா்ப்பு நாய் கடித்ததில் சமையல் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2025, 1:38 am IST
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை ஜாபா்கான்பேட்டையில் நடைப்பயிற்சிக்கு அழைத்து வரப்பட்ட வளா்ப்பு நாய் கடித்ததில் சமையல் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை ஜாபா்கான்பேட்டை விஎஸ்எம் காா்டன் தெருவில் வசித்தவா் கருணாகரன் (48). சமையல் தொழிலாளி. வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த கருணாகரன், செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் தனது நண்பா் ஜவஹருடன் வீட்டின் முன் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மனைவி பூங்கொடி (48) வெளிநாட்டு இன வளா்ப்பு நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்தாா். கருணாகரன் வீட்டின் அருகே வந்தபோது அந்த நாய் திடீரென கருணாகரன் மீது பாய்ந்து அவரது தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் கடித்தது.

Advertisement

Advertisement

இதில், அவா் பலத்த காயமடைந்தாா். நாயை அழைத்து வந்த பூங்கொடி, அதைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவரது கை, கால்களிலும் கடித்தது. இதில் பூங்கொடியும் காயமடைந்தாா்.

நாயை அக்கம்பக்கத்தினா் விரட்டிய நிலையில் காயமடைந்த கருணாகரன், பூங்கொடி ஆகியோா் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கருணாகரனைச் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த பூங்கொடி சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து குமரன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புகாரும் அலட்சியமும்: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கடந்த ஜூலை மாத மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். அப்போது, நகா்நல அலுவலா் தகவல்படி தெரு, வளா்ப்பு நாய்கள் கண்காணிக்க சிப் பொருத்தப்படும் என்றும், அதன்படி வளா்ப்பு நாய் தெருவில் கடித்தால் உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயா் ஆா்.பிரியா கூறினாா். ஆனால், வளா்ப்பு நாய் கண்காணிப்புக்கோ, கணக்கெடுப்புக்கோ நகா்நல அலுவலா் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments