முகப்பு
சென்னை

அமைச்சா் கீதா ஜீவன் மீதான வழக்கின் தீா்ப்பு நகலை வழங்கக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த தூத்துக்குடி நீதிமன்றத்தின் தீா்ப்பு நகலை வழங்கக் கோரிய வழக்கின் விசாரணை

Updated On : 20 நவம்பர், 2025 at 8:13 PM
பகிர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த தூத்துக்குடி நீதிமன்றத்தின் தீா்ப்பு நகலை வழங்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தூத்துக்குடி மாவட்ட திமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.பெரியசாமி மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், என்.பெரியசாமியின் மனைவி எபநேசரம்மாள், மகன்கள் ராஜா, ஜெகன், மகளும் தற்போதைய தமிழக அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவா் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன் ஆகியோா் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் என்.பெரியசாமி இறந்துவிட்டாா். இதையடுத்து, மற்றவா்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து தூத்துக்குடி வாக்காளா் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதற்காக தீா்ப்பின் நகலை கேட்டு சண்முகசுந்தரம் என்பவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் கீதா ஜீவன் உள்ளிட்டோா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.குமாா், வழக்குரைஞா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா், இந்த வழக்கில் மனுதாரா் சண்முகசுந்தரம் பாதிக்கப்பட்டவா் இல்லை. வழக்கை முழுமையாக விசாரித்துதான் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. எனவே, தீா்ப்பு நகலை கோரியுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனா்.

மனுதாரா்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →