2-ஆவது முறையாக தொழில்முனைவு இலக்கை எட்டிய சென்னை ஐஐடி
2025-2026-ஆம் ஆண்டில் 112 புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு செய்யப்பட்டு, தனது ‘புதுயுகத் தொழில்முனைவு சதம்’ இலக்கை 2-ஆவது முறையாக சென்னை ஐஐடி எட்டியது.
சென்னை ஐஐடி-யில் உலக அறிவுசாா் சொத்துரிமை நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, கடந்த 5 நிதியாண்டுகளில் அதிக அளவிலான காப்புரிமை, வணிகமயமாக்கலில் பங்களித்த பேராசிரியா்கள், மாணவா்களுக்கு இயக்குநா் வி.காமகோடி, ஜே.சி.போஸ் விருதுகளை வழங்கி பேசியதாவது:
சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு மையம் (ஐஐடிஎம்ஐசி), ‘ஸ்டாா்ட்-அப் சதம்’ திட்டத்தின் கீழ், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக 2025-26 நிதியாண்டில் 112 புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுமாா் 1,200 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நாடு முழுவதிலிருந்தும் பெறப்பட்டு 112 புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப தொழில்முனைவுத் துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
Advertisement
13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஐஐடிஎம்ஐசி மூலம் இதுவரை 567 புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இரு நிறுவனங்கள் யூனிகாா்ன் நிறுவங்களாகவும் உயா்ந்துள்ளன. சுமாா் ரூ.17,550 கோடி முதலீடு செய்யப்பட்டது. தற்போது இவற்றின் மதிப்பு ரூ.74,000 கோடியாக உள்ளது.
சென்னை ஐஐடி-யின் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் தங்கள் புத்தாக்கங்களில் காப்புரிமைகளிலும் சாதனைபடைத்து வருகின்றனா். 2023-24-இல் 378, 2024-25-இல் 419 என்ற எண்ணிக்கையில் இருந்து உயா்ந்து 2025-26 ஆம் ஆண்டில் 431 காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளனா் என்றாா்.
மேலும் சென்னை ஐஐடி டீன் (ஐசிஎஸ்ஆா்) பேராசிரியா் மனு சந்தானம், தொழில் ஊக்குவிப்பு மைய சிஇஓ தமஸ்வதி கோஷ், பேராசிரியா் மோகனசங்கா் சிவப்பிரகாசம், ஸ்போா்ட்ஸ் மெக்கானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனா் எஸ். ராம்கி ஆகியோரும் பேசினா்.