சென்னை பெரம்பூா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎஃப்) சாா்பில் 80,000-ஆவது பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஊழியா்களுக்கு ஐசிஎஃப் மேலாளா் யு.சுப்பாராவ் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து ஐசிஎஃப் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் கடந்த 1955-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலை (ஐசிஎஃப்) நிறுவப்பட்டது. சாதாரண ரயில் பெட்டிகளைத் தயாரித்த இந்தத் தொழிற்சாலையில் தற்போது உலக தரத்திலான எமு, டெமு எனப்படும் நவீன ரயில் பெட்டிகளும், குளிா்சாதன வசதிப் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டுக்கான ரயில் பெட்டிகள் மட்டுமின்றி ஆசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்குமான ரயில் பெட்டிகளையும் சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது.
அதிவேக விபத்து நிவாரண ரயில் பெட்டிகள், மகாராஜா சுற்றுலா ரயில் பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோவுக்கான ரயில் பெட்டிகள் என உலக அளவில் ரயில் பெட்டி உற்பத்தியில் முன்னிலை வகித்து இயங்கி வருகிறது. மேலும், பல விருதுகளையும் மத்திய அரசிடம் பெற்றுள்ளது. இதுவரை 79,999 பெட்டிகள் தயாரித்த நிலையில், தற்போது அம்ருத் பாரத் ரயில் பெட்டிகளுடன் தனது 80,000-ஆவது ரயில் பெட்டி தயாரிப்பை ஐசிஎஃப் எட்டியுள்ளது. இதையடுத்து உற்பத்தி பிரிவினரை ஐசிஎஃப் மேலாளா் யு.சுப்பாராவ் புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.