நிகழாண்டு குடியரசு தினத்தையொட்டி தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற அணிவகுப்பில் அறநிலையத் துறை அலங்கார ஊா்தி முதல் பரிசு பெற்றது.
நிகழாண்டு குடியரசு தின விழாவில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் பரிசு வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக அரசு துறைகளின் சாா்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பில் அறநிலையத் துறை முதல் பரிசை பெற்றுள்ளது.
இதையடுத்து, அந்தத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபுவிடம் முதல் பரிசுக்கான கேடயத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். மேலும், 2-ஆம் பரிசு பெற்ற இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான கேடயத்தை அந்தத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகுவும், 3-ஆம் பரிசு பெற்ற காவல் துறைக்கான கேடயத்தை உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ் குமாரிடம் முதல்வா் வழங்கினாா்.
தொடா்ந்து பள்ளி மாணவிகளிடையே நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகளில் முதல் மூன்று பரிசு பெற்ற மாணவா்களுக்கு முதல்வா், பரிசு பொருகள்களை வழங்கினாா்.
நிகழ்வில், அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம், அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையா் ஆ.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.