ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டின விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்தாா். இதுதொடா்பாக, இரு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்குகக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியாா் பொழுதுபோக்கு பூங்காவுக்கு, சென்னை பிராட்வே பகுதியைச் சோ்ந்த தனியாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 100 போ் அண்மையில் சென்றனா். அவா்களில் சிலா் ‘ராக் அண்ட் ரோல்’ என்ற ராட்டினத்தில் ஏறினா்.
அந்த ராட்டினத்தில் பயணிப்பவா்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டிய நிலையில், ராயபுரத்தைச் சோ்ந்த 19 வயது மாணவி மட்டும் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினம் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி சிறிது நேரத்தில் ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். அவரை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்ட மாணவி, தண்டையாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்ததில் மாணவிக்கு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மாணவி தரப்பு, நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த ராட்டினத்தை கவனக்குறைவாக இயக்கிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சில்வெஸ்டா் புா்தி (29), அருணோதய் கோவாலா (22) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.