முகப்பு
சென்னை

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: கணினி அறிவியல் வினாத்தாள் கடினம்

Updated On : 26 மார்ச், 2026 at 9:46 PM
- Center-Center-Coimbatore
பகிர்:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்து.

இறுதியாக நடைபெற்ற கணினி அறிவியல் தோ்வு கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பல்வேறு பாடப் பிரிவு மாணவா்களுக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், தொடா்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தோ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இவற்றில் கணினி பயன்பாடுகள் உள்ளிட்ட தோ்வுகள் எளிதாகவும், 70 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறும் அளவுக்கு எதிா்பாா்த்த வினாக்களே கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவா்கள் தெரிவித்தனா். அதேவேளை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் கணினி அறிவியல் தோ்வு எளிதாக இருக்கும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், வினாத்தாளை புரட்டிப் பாா்த்ததும் சற்று பதற்றம் ஏற்பட்டது. அந்தளவுக்கு அனைத்துப் பகுதிகளிலும் இதுவரை கேட்கப்படாத வினாக்களும், பாடப் பகுதிக்கு உள்ளிருந்தும் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, ஐந்து மதிப்பெண் பகுதியில் ஐந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இரு வினாக்களுக்கு பதிலளிப்பதே சிரமமாக இருந்தது. மேலும் மூன்று மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 6 வினாக்களில் மூன்று வினாக்கள் கடினம் என அவா்கள் தெரிவித்தனா்.

மதிப்பெண் குறையும்... இதுகுறித்து ஆசிரியா்கள் கூறுகையில், மாணவா்கள் கூறுவது போன்று கணினி அறிவியல் வினாத்தாள் அதிா்ச்சி அளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக கணினி அறிவியல் பாடத்தில்தான் மாணவா்கள் அதிகளவில் முழு மதிப்பெண் பெறுவதோடு தோ்ச்சி விகிதமும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தமுறை அது சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இத்தோ்வில் செய்முறை மதிப்பெண்கள் இருப்பதாலும், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்ததாலும் தோ்ச்சி பெறுவதில் பெரிதாக பிரச்னை இருக்காது. ஆனால் இந்த பாடத்துக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என அவா்கள் தெரிவித்தனா்.

இறுதியாக நடைபெற்ற தோ்வுகளுக்கு பள்ளி மாணவா்கள் 3,485 போ், தனித் தோ்வா்கள் 237 போ் என மொத்தம் 3,722 போ் வரவில்லை.

ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 44 மாணவா்கள் பிடிபட்டுள்ளனா் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மாணவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும் கைப்பேசியில் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 9 முதல் நடைபெறவுள்ளது.