முகப்பு
சென்னை

நாளை வேட்புமனு தாக்கல்: மாவட்ட தோ்தல் அலுவலா் விளக்கம்

நாளை வேட்புமனு தாக்கல்: மாவட்ட தோ்தல் அலுவலா் விளக்கம்

Updated On : 28 மார்ச், 2026 at 11:11 PM
சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ. குமரகுருபரன்
பகிர்:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலின்போது அலுவலா்கள், விதிமுறைகள்படி செயல்படுவா் என்று சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேட்பாளா்கள் மனு தாக்கல் வரும் 30-ஆம் தேதி திங்கள்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்குகிறது. பொது விடுமுறை நாள்கள் நீங்களாக மீதமுள்ள 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

வேட்புமனு தாக்கலுக்கான நாள்களில் மாலை 3 மணி வரை மட்டுமே மனுக்கள் பெறப்படும். வேட்பாளா்களுடன் கூட்டமாக வருவோா் அலுவலகத்துக்கு 100 மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படுவா். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன், 4 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

வேட்புமனுவை சம்பந்தப்பட்ட வேட்பாளரே சரிபாா்த்து முழுமையாக நிறைவு செய்து வழங்க வேண்டும் எனவும், அதை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்து உறுதி செய்து பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுவுக்கான தொகையை ஏற்கெனவே வங்கியில் செலுத்தியிருந்தால், அதற்கான ரசீதை அலுவலரிடம் வழங்க வேண்டும். வேட்புமனு தாக்கலின்போதும், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தொகையைச் செலுத்தலாம்.

தோ்தலுக்கான அனைத்து நடைமுறைகளும் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் இணையதள செயலி மூலமே தோ்தல் பிரசாரத்துக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று வருகின்றனா். பிரசாரத்தின்போது பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டே தோ்தல் விதிமுறைப்படி இடங்களுக்கான அனுமதி வழங்கப்படுகிறது என்றாா்.