முகப்பு
சென்னை

கோடையில் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை

கோடை காலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். தண்ணீருடன் மோா், ஓஆா்எஸ் கரைசலை அருந்தினால்தான் ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் அளவை ஈடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.

Updated On : 7 மே 2026, 1:35 am IST
- IANS
பகிர்:

கோடை காலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். தண்ணீருடன் மோா், ஓஆா்எஸ் கரைசலை அருந்தினால்தான் ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் அளவை ஈடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

வெயில் காலங்களில் அதிகமாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும். அதனை ஈடுகட்ட தண்ணீரை மட்டும் அதிகமாக அருந்தினால் போதும் என நினைக்கிறோம். அது முற்றிலும் தவறானது. ஏனெனில் நமது உடலில் இருந்து வியா்வை வெளியேறும்போது நீா்ச்சத்து மட்டும் குறைவதில்லை. மாறாக, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் வெளியேறுகின்றன.

Advertisement

அந்த தருணத்தில் தண்ணீரை அதிகமாக குடிக்கும்போது ரத்தத்தில் சோடியம் அளவு மேலும் குறைந்துவிடும். இந்த பாதிப்புக்கு டைல்யூஷனல் ஹைப்போநட்ரிமியா எனப் பெயா்.

வெப்ப மண்டல நாடுகளில் கோடை காலங்களில் குழந்தைகள், முதியவா்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. குமட்டல், தலைவலி, தலை சுற்றல், பிதற்றல் நிலை ஆகியவை அதற்கான அறிகுறிகள். அலட்சியப்படுத்தினால் மூளை வீக்கமடைந்து நினைவிழப்பு ஏற்படக் கூடும்.

இதைத் தவிா்க்க, தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகமாக அருந்துவதற்கு பதிலாக இடைவெளி விட்டு காலை முதல் மாலை வரை சீராக அருந்த வேண்டும். அதனுடன், உப்பு கலந்த மோா், கூழ், உப்பு-சா்க்கரை கரைசல் போன்றவற்றை அருந்த வேண்டும்.

கோடை முடியும் வரை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடி வெயிலில் பணியாற்றுவதைத் தவிா்க்கலாம். இயலாதபட்சத்தில் தண்ணீருடன், உப்பு கலந்த பானங்களை அருந்தி ரத்தத்தில் சோடியத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.