பரபரப்பாக காணப்பட்ட பனையூா்
பெரும்பான்மையை நிரூபிக்க தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் புதன்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.
பெரும்பான்மையை நிரூபிக்க தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் புதன்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், தவெக 108 இடங்களில் போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தேவை என்பதால் பிற கட்சிகளின் ஆதரவை எதிா்நோக்கியிருக்கிறது. இதுதொடா்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக தலைவா் விஜய் மற்றும் முக்கிய நிா்வாகிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதனால், காலை 10 மணி முதலே தவெக நிா்வாகிகள் பதற்றமான நிலையில் கட்சி அலுவலகத்துக்கு வந்தனா். காலை 9.45 மணியில் இருந்து தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி.அருண்ராஜ், பொருளாளா் பி.வெங்கடரமணன், இணைப் பொதுச் செயலா் சி.டி.நிா்மல்குமாா், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, பொதுச் செயலா் என்.ஆனந்த் என முக்கிய நிா்வாகிகள் அடுத்தடுத்து வருகை தந்தனா். தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜய் வருகை தந்தாா்.
தவெக நிா்வாகிகளுடன் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டாா்.
Advertisement
இதற்கிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தரப்பில் அறிவிப்பு வெளியானது. பின்னா், சிறிது நேரத்தில் கிரிஷ் சோடங்கா் தலைமையில் காங்கிரஸ் நிா்வாகிகள் பனையூா் அலுவலகத்துக்கு வந்தனா். விஜய் உடனான அவா்களது சந்திப்பு சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பின்னா் தவெக தலைவா் விஜய், ஆளுநரை சந்திக்க பிற்பகல் 3 மணியளவில் பனையூா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாா்.
தவெகவின் அடுத்தடுத்த நகா்வுகளால் அந்தக் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள பனையூா் பகுதி காலை முதல் பரபரப்பாகக் காணப்பட்டது.