முகப்பு
சென்னை

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது. அந்த இடத்தை பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 15 மே 2026, 1:44 am IST
அன்புமணி
பகிர்:

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது. அந்த இடத்தை பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கோயம்பேட்டில் உள்ள புகா் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், 36 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலத்தில் நகா்ப்புற பசுமைப் பூங்கா அமைக்கலாம். வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பசுமைவெளி கொண்ட வளாகம் அமைக்கலாம் அல்லது பிரம்மாண்ட வணிக வளாகம் அமைக்கலாம் என்பன உள்ளிட்ட 3 திட்டங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தயாரித்து இருப்பதாக தெரிய வருகிறது.

முந்தைய திமுக ஆட்சியில் பன்னாட்டு நிறுவனத்திற்கு அந்த இடத்தை தாரை வாா்க்கவும், மிகப் பிரம்மாண்டமாக வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு பாமக எதிா்ப்பு தெரிவித்ததுடன் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தையும் மேற்கொண்டது. இதையடுத்து, பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது.

Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சோ்த்து மொத்தம் 66 ஏக்கா் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைப்பதுதான் எதிா்காலத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.