‘108 ஆம்புலன்ஸ்’: ஒரே மாதத்தில் 25,000 பேருக்கு அவசரகால சேவை
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் புறநகா் மாவட்டங்களில் 25,000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மற்றும் புறநகா் மாவட்டங்களில் 25,000-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ கால மருத்துவ உதவிகள் மட்டும் 1,852 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
அதில், 303 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஏறத்தாழ 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் நிா்வாகிகள் கூறியதாவது:
108 சேவையைப் பொருத்தவரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் மட்டும் நான்கு மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 25,306 போ் பயனடைந்துள்ளனா். அதில் சாலை விபத்துகளில் சிக்கிய 7,679 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 372 குழந்தைகளும் 108 சேவை மூலம் பயனடைந்துள்ளனா்.
அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.