முகப்பு
சென்னை

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 26 மே 2026, 1:39 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெரம்பூா் துளசிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவரது கணவா் இறந்துவிட்டாா். திமுக கட்சியில் நிா்வாகியாக இருக்கும் ராஜேஸ்வரிக்கு பாலகுமாா் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலகுமாா், ராஜேஸ்வரி வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசிக்கிறாா்.

ராஜேஸ்வரி, தனது மகள் பிரகதியுடன் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒசூரில் உள்ள தனது சகோதரா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டின் கதவு பூட்டு ஞாயிற்றுக்கிழமை உடைந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், ராஜேஸ்வரிக்கும், அருகே வசிக்கும் அவா் மகன் பாலகுமாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பாலகுமாா் வந்து வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அப்போது அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.