எடையார்பாக்கம் அரசுப் பள்ளியில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எடையார்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா மற்றும் பள்ளிக்கு கல்வி சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன், தொடக்கக் கல்வி அலுவலர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எடையார்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மூர்த்தி வரவேற்றார். விழாவில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை கே.பழனி புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ரோட்டரி சங்கத் தலைவர் சூர்யபிரபாகர், செயலர் ஹரிகிருஷ்ணன், நிறுவனத்தலைவர் அத்தாவுல்லாஹ், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பரிமேலழகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் லட்சுமி, ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, எடையார்பாக்கம் மற்றும் கோட்டூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி தலைமையில், எடையார்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பீரோ, எல்இடி தொலைக்காட்சி பெட்டிகள், டேபிள், நாற்காலி, கல்வி உபகரணப்பொருள்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி சீர்வரிசைப் பொருள்களை பள்ளிக்கு வழங்கினர்.