பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய அரசு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டி மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள ஞானபீடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பாக நடைபெற்ற இந்த பூஜைக்கு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தார். இயக்கத்தின் மாணவர் அணிச் செயலர் வழக்குரைஞர் அ.அகத்தியன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு வேள்வி பூஜையில் சிறப்பு சங்கல்பம் செய்து வைக்கப்பட்டது. அதன் பின், இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன், மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் ஸ்பிக் சுந்தரம், லிங்கநாதன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.