மேல்மருவத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நிறைவு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 4 நாள் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 4 நாள் இலவச கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
இலவச கண்சிகிச்சை முகாம் ஆதிபராசக்தி அன்னதானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, 4 நாள்களாக நடைபெற்று வந்த முகாம் திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் மருத்துவர் டி.ரமேஷ் வரவேற்றார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி தாளாளர் கோ.ப.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 1,046 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மதுராந்தகம் சார்-ஆட்சியர் மாலதி, செய்யூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் மோமன், ஆதிபராசக்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மருத்துவர் சக்திதாசன், கண் மருத்துவர்கள் சந்தானலட்சுமி, ஹேமந்த், ரேவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முகாமுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சென்னை அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவன நிர்வாகிகள் வழங்கி இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.