நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எறையூர் கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் மூலம் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எறையூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்கு வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன வசந்தி தலைமையில், ஊரக வளர்ச்சித்துறையினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்துடன் கிராமத்தின் தெருக்களில் மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அப்பகுதி மக்களிடம் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தாம்பாளத்தில் வைத்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
அத்துடன், வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைவரும் தேர்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசுயா, வட்டார ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், எறையூர் ஊராட்சிச் செயலர் சரவணன், ஊராட்சிச் செயலர்கள் கொளத்தூர் சரவணன், தண்டலம் ரமேஷ், பிள்ளைப்பாக்கம் ராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.