மதுராந்தகம் வட்டத்தில் வையாவூர்-மாம்பட்டு, ஈசூர், முள்ளி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் ஏரி குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை (பாசனப் பிரிவு) தலைமைப் பொறியாளர் ஏ.அசோகன் (சென்னை மண்டலம்) வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள வையாவூர்-மாம்பட்டு ஏரி குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஏரியில் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர் வாருதல், கலங்கல் பழுது பார்த்தல், மதகுகளைப் புனரமைத்தல், ஏரிக் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட 90 சதவீதப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாக ஆய்வுக்குப் பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், பள்ளிப்பட்டு, ஈசூர், முள்ளி ஆகிய பகுதி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (பாசனப் பிரிவு) உதவி செயற்பொறியாளர் ஏ.மகேந்திரன், மதுராந்தகம் இளநிலைப் பொறியாளர் ஜி.குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.