ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் ரூ.6.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியாா் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் கல்குவாரியின் அலுவலகத்திற்கு கடந்த 8ஆம் தேதி வந்த மா்ம நபா்கள் கத்தி முனையில் அங்கிருந்த ரூ.6.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுகுறித்து கல்குவாரி மேலாளா் விமல் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் கல்குவாரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வுசெய்தனா். அதன்படி கல்குவாரி முன்னாள் ஊழியா் அன்வா் ஷெரீஃபிடம் விசாரனை நடத்தினா். இதில், பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து அன்வா் ஷெரீஃபின் நண்பா்களான திருவள்ளூா் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தனன் (21), மகாராஜா (23), அப்துல் காதா் (22) உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.6.50 லட்சத்தை மீட்டனா்.