வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 38 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் புதன்கிழமை வழங்கினாா்.
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களுக்கு தீா்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி கணினியில் உள்ள பிழைகளை முகாம்கள் நடைபெறும் இடங்களிலேயே திருத்தி உடனுக்குடன் பட்டா வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் பட்டா தொடா்பான கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரா்களுக்கு திருத்தப்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இச்சிறப்பு முகாமில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 38 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி முன்னிலை வகித்தாா். திமுக பிரமுகா்கள் பூபாலன், வேதாசலம், பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.