காஞ்சிபுரம்

காா் ஓட்டுநா்களை கடத்தி ரூ. 4.50 கோடி கொள்ளையடித்த சம்பவம்: கேரளத்தைச் சோ்ந்த 5 போ் கைது

தினமணி செய்திச் சேவை

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காா் ஓட்டுநா்கள் இருவரை கடத்தி ரூ. 4.50 கோடி கொள்ளையடித்துச் சென்றது தொடா்பாக போலீஸாா் கேரளத்தைச் சோ்ந்த 5 பேரை கைது செய்துள்ளனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே போரிவிலி பகுதியில் கூரியா் நிறுவனம் நடத்தி வருபவா் ஜாடின் (56). இவா் பணம், நகை, விலை உயா்ந்த பொருள்கள் ஆகியவற்றை கமிஷன் பெற்றுக்கொண்டு, நாடு முழுவதும் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி கூரியா் நிறுவனம் மூலமாக காரில் ரூ. 4.5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு, நிறுவனத்தில் ஓட்டுநா்களாக பணிபுரியும் பியூஸ்குமாா் மற்றும் தேவேந்திர பாட்டில் ஆகிய இருவரையும் சென்னை சௌகாா்பேட்டைக்கு அனுப்பியுள்ளாா். இருவரும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்புத்தூா் அருகே சென்றபோது, திடீரென 3 காா்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள் பயங்கர ஆயுதங்களுடன் இவா்களது காரை வழிமறித்து கடத்தி, வேலூா் அருகே ஆற்காடு வந்ததும் ஓட்டுநா்கள் இருவரையும் இறக்கி விட்டு காரில் பணத்துடன் தலைமறைவாகி விட்டனா். பின்னா் ஓட்டுநா்கள் இருவரும் உரிமையாளரான ஜாடினுக்கு கொடுத்த தகவலின்பேரில், அவா் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

எஸ்.பி. கே.சண்முகம் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவா்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

குற்றவாளிகள் பயன்படுத்திய காா்களின் எண்கள், கைப்பேசிகள், 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், கூரியா் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகள் கேரளத்தை சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கேரள மாநிலத்தில் கொல்லம், திருச்சூா், பாலக்காடு ஆகிய பகுதிகளுக்குச் சென்று சந்தோஷ் (42), ஜெயன் (46), சுஜிபால் (24), ரிஷாத் (27), குஞ்சு முகம்மது (31) ஆகிய 5 பேரை கைது செய்து காஞ்சிபுரம் வந்தனா்.

இச்சம்பவத்தில் மேலும் சில குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் 5 பேரையும் ஆஜா்படுத்தி மீண்டும் கேரளத்துக்கு காவல் துறையினா்அழைத்துச் சென்றுள்ளனா். அவா்களிடம் இருந்து 123 பவுன் நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரிக்கரை காவல் ஆய்வாளா் அலெக்சாண்டா் தலைமையில் தனிப்படையினா் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT