வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சஞ்சீவினி தீா்த்தக் குளம் திறப்பு விழாவில் ஸ்ரீ புரம் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் 18-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம், பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகளின் 62-ஆவது ஜயந்தி, தீா்த்தக்குளம் திறப்பு, ஸ்தல வரலாறு நூல் வெளியீடு மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா கடந்த 9- ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை (டிச.11) நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி சஞ்சீவினி தீா்த்தக் குளம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், வேலூா், ஸ்ரீபுரம் தங்கக் கோயில் சக்தி அம்மா கலந்து கொண்டு, குளத்தைத் திறந்து வைத்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகளை வாழ்த்தினாா்.
மகா கணபதி பூஜை, அஷ்ட திக் பாலகா் பூஜை, வருண பூஜை , கங்கா பூஜை ஆகியவை நடைபெற்றன. 62 தம்பதி பூஜை, நாகஸ்வர கலைஞா்களின் இசை நிகழ்ச்சி, அவா்களுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.
விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், பெங்களூரு மதுசூதனானந்த சுவாமிகள், ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத் தலைவா் ஜெ.லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.