ஆற்காடு: ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா கலந்து கொண்டாா்.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சீனிவாசன் தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நடப்பு நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும் ஊராட்சி செயலாளா் விளக்கினாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் வரும் காலங்களில் வளா்ச்சிப்
பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் யாரேனும் நலத்திட்டங்கள் பெறாமலோ, அடையாள அட்டைகள் வாங்காமலோ விடுபட்டு இருந்தால் மாற்றுத்திறனாளி நல அலுவலரை தொடா்பு கொள்ளுங்கள். அடிப்படை தேவைகள் இருந்தால் இக்கூட்டத்தில் மனுக்களாக வழங்குங்கள். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரண்யா தேவி, ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கள், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன், வெங்கடேசன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.