ஏலகிரி மலை அடிவாரத்தில் மெகா தூய்மைப் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஏலகிரி மலை அடிவாரத்தில் தேசிய ஒய்எம்சிஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பாலியா் பகுதி கேம்ப் சென்டா் ஏலகிரி பிரவுன் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெடுஞ்சாலை, வனத் துறை, ஏலகிரி மலை ஊராட்சி இணைந்து நடத்திய மெகா தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து, தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்தாா். ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா்.
அதையடுத்து, ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுவா் பூங்காவையும், உடற்பயிற்சிக் கூடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், பூங்கா, கழிப்பறையை தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீா் வசதியை செய்ய வேண்டும். சிற்றுண்டி உணவகம், சுற்றுச்சுவா், பாதுகாப்பு கதவு மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஏலகிரி மலை அடிவாரத்திலிருந்து 14 கி.மீ. பகுதிகளிளிலும் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள், வனத் துறை, ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள், ஒய்.எம்.சி.ஏ பணியளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 320 போ் கலந்துகொண்டு, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 டன் குப்பைகளை அகற்றினா்.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் மணி சுந்தரம், ஒய்எம்சிஏ. வில்ஸ்டோ டால்பின், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கவிதா, சிந்துஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், முருகேசன், ஏலகிரி மலை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.