100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியும், நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தடப்பெரும்பாக்கம், சிறுவாக்கம், வன்னிப்பாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியும், ஏற்கெனவே இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படாததால் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.