மத்திய பாதுகாப்புப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஆவடி அருகே மத்திய பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி அருகே மத்திய பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய பாதுகாப்புப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ்சந்த்ராய் ( 23) கடந்த 8 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் இவருக்கு பயிற்சி மைய வளாகத்தில் உள்ள துப்பாக்கிக் கிடங்கில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கைலாஷ்சந்த்ராய் திடீரென அங்கிருந்த துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாராம். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு அதிகாரிகள் சென்று பார்த்த போது அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக கைலாஷ் சந்த்ராய் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைலாஷ் சந்த்ராய் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல இருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.