கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடுத்துச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவணைய்யா (49). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி யசோதா (45). இவரது இரு மகன்கள் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை இரு மர்ம நபர்கள் கள்ளச் சாவி போட்டு வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த யசோதாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். இதை அறிந்த யசோதா கூச்சலிட்டார்.
உடனே அருகில் இருந்த ரவணைய்யா மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் ரவணைய்யாவை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, 9 சவரன் தங்க நகையுடன் தப்பினர்.
சப்தம் கேட்டு, மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ரவணைய்யாவின் இரு மகன்களும் மர்ம நபர்களை துரத்திச் சென்றனர். ஆனால் அவர்களையும் தாக்கிவிட்டு, மர்மநபர்கள் நகையுடன் தப்பிச் சென்றனர். இதையடுத்து, பலத்த காயமடைந்த ரவணைய்யாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், ரவணைய்யா வீட்டுடன் வைத்திருந்த பெட்டிக் கடையை உடைத்து, ரூ. 2ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.