கும்மிடிப்பூண்டி: நிலவள நீர்வள திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி அடுத்த எல்.ஆர்.மேடு பகுதியில் மா பயிரிடும் விவசாயிகளை இணைத்து மா உற்பத்தியாளர் நிறுவனம் துவக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் வேளாண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விவசாயிகள் அணி துணை அமைப்பாளரும், தோக்கம்மூர் ஊராட்சி முன்னாள் தலைவருமான டி.மணி தலைமை தாங்கினார். ஊராட்சி துணை தலைவர் ஜெ.மூர்த்தி, தொழிலதிபர் ஏ.வி.ராமகிருஷ்ணன் , முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் அங்கமுத்து, சீனன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆரம்பாக்கம், தோக்கம்மூர், எகுமதுரை, பூவலை, எம்.ஆர்.கண்டிகை, எல்.ஆர்.மேடு, எடகண்டிகை, ஏடூர், காரூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் மா விவசாயிகள் விவசாயிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை வணிக பிரிவு துணை இயக்குனர் இ.ராஜேஷ்வரி பங்கேற்று மா உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது குறித்தும், நிறுவன சட்டத்தின் படி நிறுவன இயக்குனர்களை தேர்வு செய்வது குறித்தும், விற்பனை சேமிப்பு, மாம்பழம், மாம்பழத்தினை கொண்டு பழக்கூழ், ஊறுகாய் தயாரித்து அதன் மதிப்பை கூட்டுதல், விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி, உரிய விலைக்கு விற்பனையை உயர்த்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து மா உற்பத்தியில் உள்ள இடர்பாடுகள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் வணிக அலுவலர் க.அமுதா விளக்கமளித்தார்.
மேலும் நிகழ்வில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜாராம் மா விவசாயிகளுக்கு இலவசமாக மா கன்றுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். நிகழ்வில் 10 கிராம மா விவசாயிகளை இணைத்து 2 மா உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைப்பதென விவாதிக்கப்பட்டது.
நிகழ்வின் முடிவில் உதவி வேளாண் அலுவலர் வணிகம் சாரதி நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தோக்கம்மூர் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.மணி அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.