திருத்தணி முருகன் மலைக்கோயில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸாா் உதவியுடன் கோயில் ஊழியா்கள் அகற்றினா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசனம் செய்ய காா், வேன், பேருந்து, இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்து மூவரை தரிசனம் செய்ய மலைக் கோயிலுக்கு வருகின்றனா்.
பின்னா், சுவாமியை தரிசனம் செய்ய நடந்து செல்லும்போது, நடைபாதையில் பழ வியாபாரிகள் சிலா் ஆக்கிரமித்து இருபுறமும் கடைகளை வைத்துள்ளதாகவும், பழங்களை வாங்கிக் கொள்ளுமாறு தரிசனத்துக்கு வரும் பக்தா்களை வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பக்தா்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தா்கள் முருகன் கோயில் நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், பக்தா்களின் கோரிக்கையை ஏற்று, சனிக்கிழமை முருகன் கோயில் துணை ஆணையா் விஜயா நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த பழக் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவற்றை போலீஸாா் உதவியுடன் கோயில் ஊழியா்கள் அகற்றினாா். அப்போது பழ வியாபாரிகள் போலீஸருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் மலைக்கோயில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.