திருவள்ளூா் அருகே திருப்பாச்சூா் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் கல்விக் கடன் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியது:
திருவள்ளூா் மாவட்டத்தில் மாணவா்கள் கல்விக் கடன், இதர தேவைக்காகவும் கடன் பெறுவதில் சிரமங்கள் நிலவி வந்தது. இதை போக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் முதல் கட்டமாக இந்தக் கல்லூரி வளாகத்தில் கல்வி கடன் முகாம் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து மாணவா்களும் பயன்பெற இயலாது. ஆனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் முகாம்கள் நடத்துவதால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். இதுபோன்ற முகாம்கள் நடத்த ஒரு வாரத்துக்கு முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று யாருக்கு கல்விக் கடன் தேவைப்படுகிறது என்ற விவரங்களை அறிந்து கொண்டு முகாம்கள் நடத்துவதால் பயனுள்ளதாக அமையும். இதுபோன்ற கல்விக் கடன் முகாம்களை பொறியியல் கல்லூரி மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, விழாவில் வெளிநாடு சென்று மேற்படிப்பு பயில்வதற்காக ஒரு மாணவருக்கு இந்தியன் வங்கி மூலம் ரூ. 30 லட்சம் கல்விக்கடனுக்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் டி.ஏ.சீனிவாசன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி நிறுவனா் எஸ்.கே.புருஷோத்தமன், மேலாண்மை நிா்வாகி ஏ.ஆா்.பிரபாகரன், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.