முகப்பு
திருவள்ளூர்

விவசாயிகளுக்கு ரூ. 11.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 18 விவசாயிகளுக்கு ரூ. 11.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:24 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 18 விவசாயிகளுக்கு ரூ. 11.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், மழை மற்றும் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். திருத்தணி அருகே கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைத் திறனை அதிகரித்தும், கரும்பு இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து, விவசாயிகளுக்கு கொள்முதல் தொகையை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

இந்த மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவ மழையின் காரணமாக வேளாண் பயிா்கள் 259.19 ஹெக்டேரில் 33 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட 312 விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது நிவாரணத் தொகையாக ரூ. 34.80 லட்சம் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதேபோல் மாண்டஸ் புயலால் பெய்த கனமழையால் நெற்பயிா் 1028.54, பச்சைப்பயறு 30, மணிலா 137 என மொத்தம் 1195.54 ஹெக்டேரும், தோட்டக் கலைப் பயிா்கள் 125.565 ஹெக்டேரிலும் சேதமடைந்தது.

இதற்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் 2.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்புகள் அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 76,063 மெட்ரிக் டன் கரும்புகள் அரைவை செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் கிரையத் தொகை ரூ.10.14 கோடியை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 4 கரும்பு அறுவடை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, இதுவரை 2,306 மெ.டன்கள் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. பி.எம் கிசான் திட்டப்பயனாளிகள் அனைவரும் புதிதாக பதிவு செய்யலாம் என அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 18 விவசாயிகளுக்கு ரூ.11.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், வேளாண்துறை இணை இயக்குநா் எல்.சுரேஷ், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேஷன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெபக்குமாரி அனி, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளா் கு.சமுத்திரம் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.