மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள்: ரூ.13 லட்சத்துக்கு ஏலம்
திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 77 வாகனங்கள் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 77 வாகனங்கள் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருள்கள் கடத்திய மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரால் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் திருவள்ளூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டாா். அதன்பேரில், மது மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்பட்ட வாகனங்களை வெள்ளிக்கிழமை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இந்த ஏலத்தை திருவள்ளூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஹரிகுமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது, இரு சக்கர வாகனங்கள் - 81, சக்கர வாகனங்கள்- 3, நான்கு சக்கர வாகனங்கள்-15 என மொத்தம் 99 வாகனங்கள் ஏலம் விட நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலம் எடுப்பவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
ஏலத்தில் நிறைவாக மொத்தம் 99 வாகனங்களில், 77 வாகனங்கள் மட்டும் ரூ. 13.06 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.