பங்குதாரரிடம் ரூ.27 கோடி மோசடி: ஒருவர் கைது
திருமழிசையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பங்குதாரரிடம் ரூ. 27 கோடி வரை மோசடி செய்த வழக்கில் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், ஆலியூர், மேளத் தெருவைச் சேர்ந்தவர் அகமது கபீர் (56). இவர் சிங்கப்பூரில் பணியாற்றிய போது, அங்கு பணியாற்றி வந்த மலேசியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் அகமது கபீர், செல்வேந்திரன் மற்றும் சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த காதர் ஆகிய 3 பேரும் சேர்ந்து பூந்தமல்லி அருகே திருமழிசை தொழிற்பேட்டையில் மின்சார வயர் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தினர்.
இதில், காதர் என்பவருக்கு 50 சதவீத பங்குத் தொகையும், செல்வேந்திரன் மற்றும் அகமது கபீர் ஆகிய இருவருக்கும் சேர்த்து 50 சதவீத பங்குத் தொகையும் பிரித்துக் கொள்வதாக முடிவு செய்தனர்.
இதற்கிடையில், செல்வேந்திரன் மற்றும் அகமது கபீர் இருவரையும் நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாக நடத்திக் கொள்ளும்படி கூறி விட்டு, காதர் பிரிந்து சென்று விட்டாராம்.
இந்த நிலையில், செல்வேந்திரன், பாஸ்கர் என்பவர் மூலம் நிறுவனம் தொடர்பான முடிவுகளை தன்னிச்சையாக கையாண்டு, தனது பங்குதாரரான அகமது கபீர் போன்று ஆவணங்களில் பாஸ்கரை வைத்து போலியாக கையொப்பமிட்டு, சுமார் ரூ. 27 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட அகமது கபீர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.
ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு, அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலி ஆவண தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டம், புலியூர், ராமர் மடம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (56) என்பவரை திங்கள்கிழமை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு வழக்கில் தலைமறைவாகியுள்ள செல்வேந்திரனை போலீஸார் தேடி வருகின்றனர்.