பெண் மருத்துவர் தற்கொலை வழக்கு: விஞ்ஞானி கணவர் கைது
அம்பத்தூரில் வரதட்சணை கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை செய்துவழக்கில், மருத்துவ விஞ்ஞானி கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூரில் வரதட்சணை கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை செய்துவழக்கில், மருத்துவ விஞ்ஞானி கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஹசாருதீன் (31). இவர் சென்னை சேத்துபட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) விஞ்ஞானியாக உள்ளார். இவரது மனைவி ஹுருல் சமீரா (29). இவர் சென்னை அண்ணாநகரில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். ஹசாருதீன், ஹுருல் சமீரா ஆகிய இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி, ஹுருல் சமீரா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஹுருல் சமீராவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் பிராங்டி ரூபன் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் ஹுருல் சமீராவுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆனதால் அம்பத்தூர் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஹசாருதீன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
அதில் ஹசாருதீன் வரசதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், ஹுருல் சமீரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையின் படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் தலைமறைவாக இருந்த ஹசாருதீனை கைது செய்தனர்.