பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்! வெடிகுண்டா?
பழவேற்காடு மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள் பற்றி...
பொன்னேரி: பழவேற்காடு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காட்டில் 30 -க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் அமைந்துள்ளன. இங்கு வசிப்போரில் பெரும்பாலோனோர் அங்குள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
பசியாவரத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் வழக்கம் போல் தனது படகில் 4 பேருடன் சேர்ந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது அவர்களது மீன்பிடி வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட இரும்பிலான துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது.
இது குறித்து மீனவர்கள் கரைக்கு திரும்பியவுடன், திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அங்கு விரைந்து சென்ற திருப்பாலைவனம் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதனை சோதனை செய்தனர்.
இதன்பின்னர் காவல்துறையினர் அந்த பொருளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மர்ம பொருள் ஒத்திகை பயிற்சியில் பயன்படுத்திய வெடிகுண்டா, ராக்கெட் லாஞ்சர் போன்ற வெடிபொருளா, கடற்படை கப்பலில் இருந்து தவறி விழுந்ததா அல்லது நாச வேலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியதால் பழவேற்காடு பகுதியில் பரபரப்பு நிலவியது.