முகப்பு
திருவண்ணாமலை

ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களை கைது செய்ய முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலையில் ஊழல் அதிகாரிகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பினரைக் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:16 AM
பகிர்:

திருவண்ணாமலையில் ஊழல் அதிகாரிகளைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பினரைக் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினரிடம் அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் அனுமதி பெற்றிருந்தனர். இதனயடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் எதிரே திங்கள்கிழமை காலை 500-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டன. காலை 10 மணி அளவில் சுமார் 300 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டனர்.
இதனிடையே,  ஊழல் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதற்கான ஆதாரங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்டம் நடந்தால் மாவட்டத்தில் உள்ள பல அரசு அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகும் என்றும் உளவுத் துறை மூலம் மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தகவல் வந்துள்ளது. எனவே, உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். 
இதனால், பொது அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் சாரோன் சவுந்தர், சலவைத் தொழிலாளர் நலக் குழு நிர்வாகி த.ம.பிரகாஷ் உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த வாக்குவாதத்தின் இறுதியாக, ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துவிட்டு, கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் கண்டிப்பாக கைது செய்வோம் என்று போலீஸார் எச்சரித்தனர். 
இதனையடுத்து, கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து ஊழல் அதிகாரிகளைக் கண்டித்தும், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்காகப் பணி செய்யும் அதிகாரிகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அப்போது, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருவது காவல் துறையின் பணி. எனவே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிடுங்கள் என்று ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அவர்களிடம் கூறினார்.
இதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியை  சந்திக்க கூட்டமைப்பினர் முயன்றனர். நீண்ட நேரமாகியும் சந்திக்க முடியாததால், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்வதாகவும், அடுத்தக்கட்ட போராட்டம் விரைவில் நடைபெறும் என்றும் கூறி அனைவரும் கலைந்து சென்றனர். 
இதனால், காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பும் காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.