ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மீண்டும் பணி வழங்கக் கோரி, சேத்துப்பட்டில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு அருகேயுள்ள திருமலை ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அந்த ஊராட்சியைச் சேர்ந்த பணிதள பொறுப்பாளர்கள் மாற்றுத் திறனாளிகளிடம் வாரத்தில் ரூ.100 வசூலிப்பதற்கு எதிராகவும், இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், பணம் பெறும் பணிதள பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும், தொடர்ந்து ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தியும், சங்கத்தின் வட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பணிதள பொறுப்பாளர்களை மாற்றுவதாகவும், பணம் பெற்றிருப்பின் விசாரணை நடத்துவதாகவும் கூறினர் இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கலைந்துசென்றனர்.
போராட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் ஜீவா, சண்முகம், மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலர் செல்வம், பொருளாளர் சத்யா, திருமலை பாஸ்கரன் மற்றும் திருமலை ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.