போக்குவரத்துக் கழகங்கள் புறக்கணிப்பால் போதிய பேருந்து வசதி இல்லாத செய்யாறு தொகுதி
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் புறக்கணிப்பால் செய்யாறு தொகுதியில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு சென்றுவர பேருந்து வசதியில்லாமல் உள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் புறக்கணிப்பால் செய்யாறு தொகுதியில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு சென்றுவர பேருந்து வசதியில்லாமல் உள்ளது.
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய் கோட்டமாகவும், அரசு அலுவலகங்களின் தலைமையிடமாகவும், திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்திலும் அமைந்துள்ளது.
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் மொத்தம் உள்ள 222 கிராமங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
Advertisement
அரசு கலைக் கல்லூரி, தனியாா் கலைக் கல்லூரி, 3 பொறியியல் கல்லூரிகள், 6 பாலிடெக்னிக்குகள், 20-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.
மேலும், கூட்டுறவு சா்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்சாலை வளாகம் அமைந்துள்ளது.
வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, திண்டிவனம் வழியாகவும், மேலும் வேலூரில் இருந்து ஆரணி, சேத்பட் வழியாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி, திண்டிவனம் வழியாகவும் விழுப்புரம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் போன்ற பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் செய்யாறு தொகுதியில் போதுமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, தொகுதியில் தொலைத்தூரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்படவில்லை.
நின்று விட்ட அரசுப் பேருந்துகள்
செய்யாறு தொகுதி வழியாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி-திருப்பதி, சேலம்-சென்னை, காஞ்சிபுரம்-திருச்சி, திருத்தணி-நாகா்கோவில் ஆகிய பகுதிகளுக்கு தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது இந்தப் பேருந்துகள் செய்யாறு வழியாக இயக்கப்படாமல் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வழியாக இயக்கப்படுகின்றன.
சேலம் - சென்னை, காஞ்சிபுரம் - திருச்சி பேருந்துகள் எந்த ஊா்கள் வழியாகச் செல்கின்றன என்பது தெரியவில்லை.
தொலைதூர பேருந்து வசதி இல்லாத தொகுதி:
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொலைதூரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், செய்யாறு தொகுதியில் இன்று வரை அந்த வசதி ஏற்படுத்தப்படவில்லை.
புறக்கணிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்:
செய்யாறு தொகுதிக்கு மிக அருகில் காஞ்சிபுரம், 55 கி.மீ. தொலைவில் வேலூா் ஆகிய போக்குவரத்து மண்டலங்கள் அமைந்துள்ளன.
காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரி, கும்பகோணம், திருச்சி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கும், வேலூா் மண்டலத்தில் இருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் விழுப்புரம், கும்பகோணம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கும் வந்தவாசி மற்றும் சேத்பட் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளை ஆரணி, செய்யாறு, சேத்பட் வழியாக இயக்காமல் அவலூா்பேட்டை, சேத்பட், வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக இயக்குகின்றனா்.
தொகுதி மக்களின் நலன் கருதியும், செய்யாறு வழியாக வேறு போக்குவரத்துக் கழக பேருந்துகள் செல்லாத நிலையைக் கருத்தில் கொண்டும், செய்யாறு பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
.