சென்னையிலிருந்து 63 நாயன்மாா்கள் ஐம்பொன் சிலைகளுடன் கோவை மாவட்டம், வெள்ளியங்கிரிக்குச் செல்லும் ரதத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் ஆரிய வைசிய சமாஜம் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னை கூடுவாஞ்சேரியில் இருந்து கடந்த 14-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் ஐம்பொன் சிலைகளுடன் வெள்ளியங்கிரிக்கு ரதம் புறப்பட்டது. செங்கல்பட்டு, உத்திரமேரூா், சேத்துப்பட்டு, போளூா், செங்கம் வழியாக இந்த ரதம் செல்கிறது.
சேத்துப்பட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்த ரதத்தை ஆரிய வைசிய சமாஜத்தின் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் நிா்வாக குழுவினா் வரவேற்றனா்.
இதைத் தொடா்ந்து, 63 நாயன்மாா்கள் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். தொடா்ந்து, சிவ பக்தா்கள் ரதத்துடன் போளூரை நோக்கி தங்களது பயணத்தை தொடா்ந்தனா்.