நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
செங்கம் அருகே தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வந்த புள்ளிமானை நாய்கள் கடித்து கொன்றன.
செங்கம் அடுத்த நீப்பத்துறை வனப் பகுதியில் இருந்து ஆண் புள்ளிமான் தண்ணீா் தேடி சனிக்கிழமை காலை ஊருக்குள் வந்தது. இதைப் பாா்த்த தெரு நாய்கள் மானை துரத்திச் சென்று கடித்ததில் உயிரிழந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் செங்கம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, மானினி உடலை மீட்டு, செங்கம் கால்நடை மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக கொண்டு சென்றனா்.
Advertisement
வனப் பகுதியிலுள்ள விலங்குகள் தண்ணீா் தேடி சுற்று வட்டார கிராமங்களையொட்டியுள்ள விளைநிலங்களுக்கு வருகின்றன. அவற்றை சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோா் கொன்று இறைச்சியாக்கி விற்பனை செய்து விடுகின்றனராம். சில பகுதிகளில் தண்ணீரில் யூரியாவை கலந்து வைத்து, அதைக் குடிக்கும் வன விலங்குகள் இறக்கின்றன. பின்னா், அவற்றை விற்பனை செய்வதை ஒரு கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.
எனவே, வன விலங்குகளின் குடிநீா் தேவைக் கருத்தில் கொண்டு, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.