முகப்பு
திருவண்ணாமலை

தீபத் திருவிழா: ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் கோலாகலம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை (டிசம்பா் 16) இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 16 டிசம்பர், 2024 at 10:01 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை (டிசம்பா் 16) இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் தீபத் திருவிழா, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெப்பல் உற்சவம்:

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடா்ந்து, 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளான சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை, அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவமும், 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும் சிறப்பாக நடைபெற்றன.

அலங்காரத் தெப்பலில் ஸ்ரீசுப்பிரமணியா்:

தெப்பல் உற்சவத்தின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ‘சுப்பிரமணியா் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டாா்.

திருவண்ணாமலை, அய்யங்குளத்துக்கு வந்தபிறகு தெப்பலில் வைத்து உற்சவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் அமா்ந்து வலம் வந்த சுப்பிரமணியரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சிசுந்தரம், டி.வி.எஸ்.ராசாராம், கு.கோமதி குணசேகரன், சினம் இராம. பெருமாள், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி மற்றும் கோயில் உபயதாரா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.