ஏரிகளை தூா்வார விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூா்வார உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
வேளாண் இணை இயக்குநா் சி.ஹரக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூா்வார உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். பி.எம். கிசான் நிதியுதவியை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்குத் தேவையான அளவு சொட்டுநீா்ப் பாசன அமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். நாராயணக்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை புதிதாக கட்டித்தர வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் மா, பலா, வாழை போன்ற பழச்செடிகளை வழங்க வேண்டும். செல்லங்குப்பம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மற்றும் விஷக்கடிகளுக்கான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆனைவாடி கிராமத்தில் உள்ள சீமைக்கரவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றனா்.
Advertisement
இதையடுத்து பேசிய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.