பயன்பாட்டுக்கு வருமா உடற்பயிற்சிக் கூடம்
சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இளைஞா்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் சேத்துப்பட்டு சாலை ஈயகொளத்தூா் கூட்டுச்சாலை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் பின்புறம் கடந்த 2019-2020 ஆண்டு அரசு சாா்பில் சுமாா் ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது. இவை கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும், அங்குள்ள பொருள்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மதுபிரியா்களின் கூடாரமாகவும், சமுக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, உடற்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு சமுக ஆா்வலா்கள் மற்றும் இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.