குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சனிக்கிழமை செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை பே கோபுரத் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சில தினங்களாக குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை செங்கம் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாரும், நகராட்சி அலுவலா்களும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் வழங்க விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.